economics

img

இந்திய வாழைப்பழங்களுக்கு இவ்வளவு மவுசா! அப்படி என்னதான் இருக்கு?

இந்திய வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளதால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகும் வாழைப்பழங்களின் சதவிகிதம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் வாழைப்பழம் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வாழைப்பழ ஏற்றுமதி கடந்த 2013 ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.26 கோடியாக இருந்த நிலையில், 2022 ஏப்ரல்-மே மாதத்தில் ரூ.213 கோடியாக உயர்ந்தது. இது 703 சதவிகிதம் அதிகம் என்பதும், வியக்க வைக்கும் வகையில் இந்திய வாழைப்பழங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விளையும் வாழைப்பழங்களின் தரம் காரணமாகவே உலக அளவில் அதன் ஏற்றுமதி அதிகரிக்க காரணம் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆகிய அமைப்புகள் வாழைப்பழ உற்பத்தி மற்றும் பதப்படுத்தப்படுவதை ஊக்கிவித்து ஏற்றுமதிக்கு உதவி செய்து வருகிறது. அதேபோல், உள்கட்டமைப்பு மேம்பாடு, தர மேம்பாடு மற்றும் சந்தை மேம்பாடு போன்ற பல்வேறு வகைகளில் வாழைப்பழ ஏற்றுமதியாளர்களுக்கு உதவி வழங்குகிறது.

உலக உற்பத்தியில் 25 சதவிகிதம், உலகின் மொத்த வாழைப்பழ உற்பத்தியில் சுமார் 25 சதவிகிதம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வாழை உற்பத்தியில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன.